Saturday, January 24, 2015


என் காதல் கணவா
ஏன் இப்படி?

காதலிக்கும் போது கை பிடிக்க
அனுமதி வேண்டியே அவ்வளவு
கெஞ்சுவாயே இப்போது ஏன் இப்படி.

என் இதழ் தீண்டாதா என நீ
ஏங்கிய நாட்களை நானறிவேன்.


மாடிப்படி மறைவு,
பேருந்தின் கடைசி இருக்கை,
ஆளில்லா திரையரங்கம்
என என்னை நீ முத்தமிட
எத்தனித்த நாட்கள் எத்தனை.
மறந்து விட்டாயா?

ஒருமுறையோடு முடித்துக்கொள்ளவா
அவ்வளவு ஏங்கினாய்?

அந்நாட்களில் எல்லாம்
என் இதழ் உனக்கு
தேன் வடிக்கும் கிண்ணம்.

எப்படி வந்தது இன்று
இது எட்சிலென்ற எண்ணம்.

அப்போது நான் உன்னை
இடை மறித்தாலும்
என் மனம் உன்னிடம்
சொல்லாமல் சொல்வது
"நான் உனக்கானவள்
கொஞ்சம் பொறு"

திருமணமும் ஆனது
உன் தேவையும் தீர்ந்தது.

இப்போது ஏன் உனக்கு
என்னுடல் இனிக்கவில்லை.

நானறிவேன், உன் ஓரப்
பார்வையிலேயே என் கற்பை
கொள்ளையடிப்பவன் நீ.

இப்போது பக்கத்தில்
படுத்திருந்தும் முதுகு காட்டி
உறங்குவது போல் நடிப்பதேன்.

காமத்தில் அழைக்கவில்லை!
காதலாய் வந்து என்
காது மடல் தீண்டு
வாரத்தில் ஒரு முறையாவது
அது போதும்.

0 comments :

Post a Comment

Tricks and Tips