Showing posts with label Tamizhkavi. Show all posts
Showing posts with label Tamizhkavi. Show all posts

Sunday, March 8, 2015



இதுவரை எத்தனையோ நபர்களால்
அழைக்கப்பட்டிருக்கிறது எனது பெயர்

ஆனால் உன் குரலில் இனித்தது போல்
பிறிதோர் குரலில் இனிக்கவில்லை.

என்னை எனக்கே அழகாய் காட்டிய
மாயக் கண்ணாடி நீ.

உன்னில் உறைந்த ரசமான பிம்பம் நான்.

என்னக்குள்ளும் ஓர் அழகிய ரூபம் இருப்பதை
நீ எனை ரசிக்கும் தருணங்களில் உணர்கிறேன்.

மோகிக்கும் நேரங்களில்
உன்னிடம் நான் சேயாகிறேன்

காதல் தாண்டி கருணை பேசும் நேரங்களில்
நீ எனக்கு தாயாகிறாய்.

கல்லையும் கலை ஓவியமாக்கவும்
புல்லையும் பூவாக்கவும்
என் காதலியே உன்னால் மட்டுமே முடியும்.

இனி காதலில்லை என்றிருந்தேன்
காதலியாய் வந்தாய்

வாய் பேசா என்னை கவிஞன் ஆக்கினாய்

பாறை என்னில் சிற்பம் வடித்தாய்
முள்ளென இருந்தவனென்னை மலராக்கினாய்

இது தான் நான் என
என்னை நானறியும் வண்ணம் ஆளாக்கினாய்.

நான் பார்த்தேன்,

நீ விரல் நீட்டி இழுக்கும் தருணங்களில்
உன்னிடம் மயங்கி வானவில்லாய் வளைகிறது
நீள் வானம்.

உனைப் பார்த்து வெட்கிச் சிவக்கிறது
மேற்க்கினில் கீழ் வானம்.

உன் வீட்டுக் கொடிக் கயிற்றில்
நீ உடுத்த வேண்டி தவமென
காய்ந்து கொண்டிருக்கிறது
பலவண்ணங்களில் பால் வண்ண மேகங்கள்.

இதோ என் மனதிலுள்ள காதலை ஊற்றி
கவிதையொன்று உனக்கென எழுதுகிறேன்.

உன் இரசனைக்கு என் எழுத்து ஆளானால்
இவ்வுலகில் நானுமோர் கவிஞன் ஆவேன்

உனைப் பாடவெனவே.

Friday, March 6, 2015

பெண்களே!!!

சற்றே ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.
எவ்வளவு தூரம் கடந்து விட்டர்கள்.

ஒரு காலத்தினில்,

ஏட்டுக் கல்வி மறுக்கப்பட்ட நீங்கள்
இன்று ஏடுகளில் எழுதப்படுகிறீர்கள்.

சமையலறை தாண்டாத நீங்கள் இன்று
சந்திராயனிலும் சாதித்தீர்கள்.

அங்கம் மட்டுமே கொடுத்துவந்த நீங்கள்
நாட்டிற்கு தங்கமும் வென்று கொடுத்தீர்கள்.

ஆடவரால் ஆளப்பட்ட நீங்கள்
இன்று அரசாளுகிறீர்கள்.

ஒப்பனைப் பதுமைகள் என்ற எண்ணம் கொன்று
ஒப்பிலாப் படைப்புகள் கொடுத்தீர்கள்.

கட்டிலையும் அதன் விளைவாய் தொட்டிலையும்
மட்டுமே கண்டுவந்த நீங்கள்

இன்று கால்பதிக்காத துறைகளுண்டோ.

சக்தி படைத்தீர்கள்
சாமானியம் துறந்தீர்கள்
சடுதியில் விரைந்து
சரித்திரம் படைத்தீர்கள்.

பெண்களே!!!
சற்றே ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

இன்னும் பயணிக்க வேண்டிய தூரம்
நிறைய இருக்கின்றது.

சிகரம் மட்டுமே உன் இலக்கல்ல
விண்ணையும் தொடு இனி
விதியென்ற வீண் பேச்சு  உனக்கல்ல.

இவ்வளவும் சாதித்த  உங்களுக்காகவே
என் மகளிர் தின வாழ்த்துக்கள்.

Saturday, February 28, 2015


என் கணவா
எப்போதடா வீடு திரும்புவாய்.

நீ கட்டிய தாலி
என் மார்பினில் மோதி
ஏதேதோ சொல்கிறது.

சமைத்து வைத்து காத்திருக்கிறேன் உனக்காக
சூடு ஆறும் முன் வந்துவிடுவாயென.

வந்தாய் பசியோடு
சுவைத்தாய் ருசியோடு.

பரிமாறினேன் உன்னிடம்
பசியமர்ந்தாய் என்னிடம்

நிறைந்துவிட்டாய்! நீ உறங்கி விட்டாய்.
என் பசி கேட்டாயா?

என் கணவா எழுந்திடு
மீதமிருக்கிறது இன்னும். 

Saturday, February 14, 2015


உன்னிடம் சொல்லாத வார்த்தைகள்
என் கவிதைகளின் வரிகளாகின்றன

உன்னிடமும் சொல்லியிருக்கிறேன்
ஆனால் அதை நீ ரசிக்கவில்லை

என் கவிகளுக்கு வரிகளானபின்
அவை கொண்டாடப்படுகின்றன.
.
.
.
பல காதலிகளால்.

Saturday, February 7, 2015


பரந்து விரிந்ததோர் ஆறு கண்டேன்
அதிலென்மனம் பாய்ந்தோடக் கண்டேன்.

வழியெங்கும் நாணல் பூ
வெண்சாமரம் வீசக்கண்டேன்.

அயிரை மீன்கள் அணிவகுத்தென்
அடிப் பாதம் தீண்டக் கண்டேன்.

தாழப் பறக்கும் மீன்கொத்தி
தன் இரைகவ்விச் சென்றிடக்கண்டேன்.

நான் நதியாகிப் போனேன்.

காலைப் பொழுது தனில்
சோலை மரங்கள் என் மேல்
பூக்களை வாரி இறைப்பது கண்டேன்.

Wednesday, February 4, 2015


ஒரு விடுமுறை தினம்
எனது கிராமத்து பேருந்து நிலையம்.

துண்டால் தலை பொத்தி
குத்தவைத்து இருமிக்கொண்டே
ஒரு பெரியவர்.

அவரருகினில் அவரின் மனைவி
வந்ததிலிருந்து அவரை
திட்டியபடியே இருக்கிறாள்.

"நீயெல்லாம் இன்னும்
உசுர வச்சுட்டு என்னத்துக்கு
இருக்குர பூமிக்கு பாரமா.

வயசுல குடியும் கூத்தியாளும்னு
கும்மாளம் போட்ட
இப்ப சீக்கு வந்து கஞ்சி
ஊத்தகூட நாதியில்லாம
திரியுற.

பெத்த புள்ள கூட மதிக்கலன்னப்பறமும்
ஒரைக்லையா ஒன் மண்டையில"

இன்னும் பலவாறும் வசை பாடியபடியே.

எனக்கு சரியான கோபம் அவள்மேல்.

பேருந்து வந்தது சற்றே நெரிசலாய்.

அவரை அப்படியே கைத்தாங்கலாய்
பிடித்து பேருந்தில் ஏற்றினால்.

இருக்கையில் இருந்த என்னிடம் வந்து

"யப்பே  ஒடம்பு சொகமில்லாத மனுசனப்பா
கொஞ்சம் ஒக்கார எடம் கொடு சாமி" என்றாள்.

அவரும் வந்தமர்ந்தார்.

அவள் அவரருகினில் கம்பியை
பிடித்த படியே தளர்வாய்
தளர்ந்து நின்றாள்.

என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை
அவளை.

கம்பியில் தலை சாய்த்து
கண்கலங்கி மெல்லிதாக புலம்பினாள்.

"எப்புடி வாழ்ந்த மனுஷன்
அதட்டி சத்தம் போட்டா
ஒருத்தன் பதில் பேச மாட்டன் ஊருல.

இப்ப சீந்த நாதியில்லாம
சீக்கு வந்து கெடக்குராக.

மகமாயி ஒனக்கு கண்ணு குறுடாப் போச்சா
அப்படி இருந்த ஆள இப்புடி
பாக்கவச்சுட்டயே என்ன

ஆத்தா போதும் இந்த சீவனம்
கூட்டிட்டு போயிடு இவுகள
ஒங்கூடவே.

ஆனா...

இவுக உசுரு போகும் நிமிஷம் முன்ன
என் மூச்ச நிறுத்திரு டீ ஆத்தா...
இவுக இல்லாத இடத்துல
எனக்கென்ன வேல"

இறங்கும் இடம் வந்தது
அவரை வெளியில் திட்டிக்கொண்டே
அழைத்துச் சென்றாள்.

அடுத்த விடுமுறை சென்றேன்
பேருந்தினில் காலியாய் இருந்தது
இரண்டு இருக்கை.

ஜன்னல் வெளி தூரத்தில் பார்த்தேன்
மின்னிகொண்டிருந்தது இரண்டு
நட்சத்திரங்கள்.

Monday, January 26, 2015



















அனைவருக்கும் இனிய குடியரசு தின  நல்வாழ்த்துக்கள்

நம்மை மன்னன் ஆண்டான்
மாற்று தேசத்தான் ஆண்டான்
இது நாம் ஆண்டுகொண்டிருக்க
வேண்டிய தருணமிது.

ஆண்டுகள் ஆனது அறுபத்து ஆறு
ஆனாலும் இன்றளவும்
நமை ஆள்வது நாம் தானா.

Sunday, January 25, 2015


என் காது மடல் வருடி
நீ இட்ட முத்தத்திலே
புரிந்து கொண்டேன் உன் மன ஓட்டத்தை
துவங்கிவிட்டாய் நீ உன் ஆட்டத்தை.

காதினில் தொடங்கி
கழுத்தேறி வளைந்து
பிடரி மயிர் கோதி விரல் நுழைத்து
மணிக் கழுத்தினில் ஒன்று
கீழ் இறங்கி மார்பினில் ஒன்று
என நீ கொடுத்த முத்தத்தில்
கிறங்கிப்போனேன்.

என் உடல் மணக்கிறது
உன் எச்சிலின் ஏகாந்த வாசம்.

என்ன வரைகிறாய் என் முதுகினில்.

Saturday, January 24, 2015


என் காதல் கணவா
ஏன் இப்படி?

காதலிக்கும் போது கை பிடிக்க
அனுமதி வேண்டியே அவ்வளவு
கெஞ்சுவாயே இப்போது ஏன் இப்படி.

என் இதழ் தீண்டாதா என நீ
ஏங்கிய நாட்களை நானறிவேன்.

Monday, January 19, 2015














விண்ணவரும் வியந்து போகும் பேரழகு
அசைந்தாடும் நின் தேகமென்னும் தேரழகு.

தரைதொடும் உன் கார் குழலென்ன
கார்முகில் வந்துறங்கும் பள்ளியறையா

நிலவினை வெட்டி ஒட்டி
வைத்ததுதானா உன் நெற்றி

பாண்டிநாட்டு மீனென மிதக்கும் உன் கண்கள்
புலியெனப் பாயவரும் என்னை
சேரன் வில்லெடுத்து கணை தொடுத்து
எனை அடக்குவதென்ன.

Wednesday, January 14, 2015

எழுவாய் தமிழனே எழுவாய்!
வந்துவிட்டது தைத் திருநாள்.
வாசனை திரவியங்கள் மணக்கும்
மேனி கொண்ட நமக்கு

கருக்கலில் கண்விழித்து
காளை பூட்டி ஏர் உழ
நெற்றி வியர்வை நிலத்தில் விழ
முப்போகம் விளைவித்தவனின்
முன்னுரை தெரியுமா?

அரிசியினை அன்னமாய்
மட்டுமே அறிந்த நமக்கு
நெல்லினை தெய்வமாகவும்
அரிசியினை பிரசாதமாகவும்

Sunday, January 11, 2015














என்ன செய்வது
மீசை முளைக்கும் முன்னமே
ஆசை முளைத்து விடுகின்றது.

பாடங்கள் பதியாத என் மனதினில்
பாவை உந்தன் முகம் மட்டும்
பார்த்த கனமே ஒட்டிகொண்டது.

உன்னிடம் சந்தேகம் கேட்பதற்க்கென்றே
பாடங்களின் தலைப்பை மட்டும் 
பதிந்து கொண்டேன்.

கரும்பலகையினில் எழுதி ரசித்தேன்
உன் பெயரினை, கார் வானில் 
கண்ட முழுநிலவென.

Saturday, January 10, 2015


























உனை எதிர்பார்த்து காத்திருந்தேன்.

அழகான அந்தி நேரம்
கருவேலங் கம்மாக்கரை ஓரம்.

அழகாய் சலசலக்கிறது நீரோடை
கரையினை வந்து வந்து தழுவியபடி.

ஏற்கனவே சிவந்திருக்கும் அலகு
மேலும் வெட்க்கிச் சிவக்கும்படி
முத்திரை பதித்துக் கொண்டிருக்கிறது
காதல் கிளிகள் இரண்டு கருவேலம் மரத்தினில்.

காற்றாய் வந்த காதலன் தீண்டிய
தீண்டலுக்கெல்லாம்












தாமரை பூங்குளத்தினிலே
தங்கம் நீ குளிக்கையிலே

அங்கமெல்லாம் அனலா கொதிக்குதடி
ஓடி வந்து உன பாக்கயிலே.

மாரளவு தண்ணியிலே
மகராசி நீ குளிக்கையிலே

தன்னழகு கொரஞ்சதா என்னி
அரளி அரைச்சு மாண்டதடி அல்லி அம்புட்டும்.

உன் மேலாடையானது பாவாடை
உன் பளிங்கு மேனி முழுவதும் பாலாடை.

பாவிப்பய நான் மீனா பொறந்திருந்தா கூட


கூதலடிக்குது கூதலடிக்குது
கூடிக் கலவ சொல்லி
கூதலடிக்குது.

தேகமெங்கும் பனி உறையுது
நீ தொட்ட மாத்திரத்தில்,

ஆடை போல அம்புட்டும் உருகுது.
அங்கமெல்லாம் அனல் பரவுது.

பனிமலரா நானிருக்க
பகலவனா என நீயுருக்க


கூதலடிக்குது கூதலடிக்குது
கூடிக் கலவ சொல்லி
கூதலடிக்குது.




எங்கோ சிதறிக்கிடந்த
உள் அணிபவைகளையும்
கணவன் போர்த்திப் படுத்திருக்கும்
தன் சேலையையும்
தேடி எடுத்து அணிந்து கொண்டாள்.

கலைந்த கார் கூந்தலையும்
அள்ளி முடிந்து கொண்டாள்.

அழகாய் சிரிக்கிறாள்
அம்மணக் குழந்தையாய்
உறங்கிக் கொண்டிருக்கும்
தன் கணவனைப் பார்த்து.

அவளுக்குள்ளேமுனகிக் கொள்கிறாள்
அவனைப் பார்த்து ரசித்தபடியே.

"கடை கடையாய் ஏறி இறங்கி
ரசனையாய் வாங்கி வந்து
அணியச்சொல்லி அழகு பார்க்கிறான்
பகலிலே.
ஆனால் அழுக்குப் பையன் இவன்
இரவு வந்தால் களைந்து விடுகிறான்
பகலணிவித்தவைகளை.
கேட்டால் என்னை அணிந்து கொள்ளேன்
என்பான் என் கலையழகு புருசன்.

இவனை கடிந்து கொள்வதா
இல்லை கட்டிக்கொள்வதா"

நீங்களே சொல்லுங்களேன்...!



Friday, January 9, 2015



கடுஞ்சொல்லு சொன்னேனுன்னு
கண்காணாம போன புள்ள.

கண்ணு ரெண்டும் தூங்கவில்ல 
கட்டியணைக்க வாடி புள்ள.

உனயென்னி நெதந்துடிக்கிறேன் 
கண்ணீர மட்டுமே கஞ்சி போல வடிக்கிறேன்.

சோறு தண்ணி எறங்கவில்ல
ஏஞ்சோகமின்னும் தீரவில்ல.

வட்டிசெம்பு வெளக்கவில்ல
வாசப் பெருக்கி கூட்டவில்ல.
எந்தாயி நீயில்லாம 
கொழம்பிப் போய் கெடக்குறேனே 
தெளிய வைக்க வாடி புள்ள.

நீ குடுத்த பால் சொம்பு 
மூலையில உருளுது.

ஓன் நெனப்பு மட்டுமே 
என் மூளையில பொரலுது.

கயித்துக்கட்டில் உன்ன 
கண் தேடுதடி 
ரவைக்குள்ள வந்துருடி...

Friday, January 2, 2015


பெருவெளிச்சமில்லை
ஆனால் அருகில் வருபவர்களை காணலாம்.

பிம்பங்களாய் தெரிகின்றன
மரங்களும் தூரத்து மலைகளும்.

கடிகாரம் பார்க்காமலே விழித்துக்கொண்டார்கள்
ஊரின் முதல் உழைப்பாளிகள்,
தொடங்கிவிட்டனர் வேலையை
காவென கரைந்துகொண்டே.

ஆள் அரவமற்ற அழகிய சாலையில்
தத்தித் தத்தித் தையல் நடை பழகுகின்றது
அழகு மைனாக்கள்.

கருப்பு வெள்ளையாய் தெரிகிறது
ஓங்கி வளர்ந்த மூங்கிலும், அதன்
உட்சிக்கிளையில் ஒய்யாரக் குருவிகளும்.

மின்சாரக்கம்பிகளும் ரசிக்கப்படுகிறது
சிட்டுக்கள் அமர்ந்து சிலிர்ப்பூட்டும்
குளிர் பொழுதுதனில்.

இயல்பாய் ரசிக்கவைக்கிறது
மீன்வால் குருவிகளும்
ஏகபாதமாய் நின்று இரைதேடும் வெண்நாரைகளும்.

பச்சைமேணி வயல்வெளிகள் எங்கும்
வெண்திட்டுகளாய் பனித்துளிகள். இவை
வானும் மண்ணும் சங்கமித்ததின்
பொருளுணர்த்தும் காதல் மொழிகள்.

சுவாசம் நிறைக்கின்றது
மாசில்லா பிராணவாயு.

நிசப்தம் கலைக்கின்றது பறவைகளின் சப்தம்
அது பகல்பொழுதின் பேரிரைச்சலுக்கெதிரான
மௌன யுத்தம்.

இந்த நாளுக்கான முதல் குளியலை ஏற்றுக்கொள்கிறது
தெளிந்த நீரோடையொன்று.

தண்ணீர் தெளிக்கும் தாவணிப்பெண்கள் தனியழகு.
புள்ளிமான்கள் இட்ட புள்ளிக்கோலம் பேரழகு.

மிதிவண்டி மிதித்துவருகிறார் பால்காரர்
தூக்கம் மிதக்கும் கண்களோடு,
பலரும் படுக்கையிலிருந்து துயில்கலைக்க.

அனைத்திற்கும் உச்சமென காணக்கிடைக்கின்றது
கதிரவனின் கீட்ரொளி அழகு
தாமரை இலையினில் பட்டுத்தெறித்து.

எப்படி உறங்கிகிடந்தேன் இத்தனை நாளாய்
இப்படியொரு அதிகாலையின் பேரழகை காணாமல்.

Wednesday, December 31, 2014
















அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்துக்கள்
வாழ்த்துகின்றேன் ஆம் என்னை, உங்களை
நான் வாழ்த்துகின்றேன்.
உழவு என்றொரு வேத வார்த்தையினையே
அழிக்க அரும்பாடுபடுகிறோமல்லவா
அதற்காக வாழ்த்துகின்றேன்!

இன்று நாமிருப்பது நகரமோ கிராமமோ
ஆனால் நான் உண்ணும்
வகைவகையான உணவிலும்,
ஏன் அதன் ஒவ்வொரு பருக்கையிலும்
பின்னால் ஒளிந்திருப்பது ஓர் உழவன்!

உழவன், அவன் நரை தள்ளிய கிழவனென்றாலும்
அவன் பிடித்த கலப்பை போலவே கரமும்
நெஞ்சினில் உரமும் படைத்தவன்.

அவன் வைரம் பாய்ந்த கட்டை,
நாமறிய மாட்டோம் அவன் பட்ட பாட்டை.

நம்மை படைத்தவன் தெய்வமென்றால்
நமக்கு உணவு படைத்தவனை
காவல் தெய்வமாகவாவது வணங்கியிருக்க வேண்டாமா?

ஏனைய தொழிலனைத்தையும்
வியாபாரமாக நோக்குவோர் நடுவிலே
உழவுத் தொழிலினை கடமையென
கட்டுக்குலையாமல் கட்டிகாத்தவன் அல்லவா உழவன்.

உழவினை காக்க அவன் பட்ட பாடு
எழுதினால் பத்தாது ஏடு.

பாட்டன் பூட்டன் காலத்து சொத்தாம்
அவன் கொண்ட காணி நிலம்.
அந்த காணி நிலம் உழுது
அதற்காக அன்னாடமும் அழுது
அன்னாடங்காச்சியாய் உலகினில்
காட்சியளித்தவன்.

விதைநெல்லுக்கு வைத்தான் தாலி அடமானம்
விளைச்சல் பொய்த்தால் போகும் அவன் மானம்.

நாமின்று சுவாசிப்பது உயிர்வளி மட்டுமல்ல
உழவனின் உயிர் வலியும் தான்.
வளி கொடுத்த மரமென்ன  தானாய் வளர்ந்ததா?
இல்லை, அந்த மரமென்ன
நாம் கம்ப்யூட்டரில் விளைவித்ததா?

அன்று நம் பாட்டனொருவன் நிலம் இட்ட
விதைபழுத்து, அதையுண்ட பட்சிகள் இட்ட
எச்சம் தான் இன்று நாம் காணும் விருட்சம்.

உழவளித்தவனின் வழித்தோன்றல்
நாம் உழவழித்தோம்.

நாமிருக்கும் கட்டிடத்தை பெயர்த்துப் பார்த்தால்
அது கூறும் அந்நிலம் உழுதவனின் பெயரினை.

தஞ்சையில் ராஜராஜனுக்குண்டு கல்வெட்டு,
தஞ்சை பெரியகோவிலை கட்டிய தொழிலாளிக்கு
உணவளித்த உழவனுக்கெங்கே கல்வெட்டு.
தொழவேன்டாமா அவன் அடி தொட்டு.
அதுதான் வைக்கிறோமே உழவுக்கே அதிர்வேட்டு.
உறைந்து போன உழவொருனால் நம்
உணவிற்கும் வைக்கும் வேட்டு.

உழவன்! அவனில்லாமல் அவனியில்லை,
அகண்டு பரந்த அகிலமில்லை,
நாம் பசித்து புசிக்க அன்னமில்லை,
அவனிட்டதை உண்ட நமக்கோ அவன் எண்ணமில்லை,
மருந்துக்கும் கூட நாம் உழவு பற்றி எண்ணவில்லை.

குதிரைவாலி செய்தவனுக்கு குதிரை பலமாம்,
வரகு செய்தவன் உடல் கருங்காலி கட்டையாம்,
சாமை உண்டு சாவை வென்றான்,
இரும்புச்சோளம்... உழவோடு இயைந்து
வாழ்ந்ததோர் இரும்புப்பொற்காலம்.

தன் பிள்ளை படிக்க காடு விற்றவன் நினைத்திருப்பான்
இவன் படித்து இழந்ததை மீட்பானென்று, ஆனால்
அவன் சொத்தில் இவன் படித்தான்,
நிலமிழந்தவன்  பலமிழந்தவனாய் அழுது செத்தான்.

விதைநெல்லுக்கும்,
விளைச்சலுக்கும்,
விளைந்தது விற்றிடவும்
அவன் வடித்த கண்ணீர்.
நாம் அறிந்திருந்தால்
அறிந்திருக்க மாட்டோம்
பஞ்சத்தின் வகையில் தண்ணீர்.

இறைவா !!! போனது போகட்டும்
உழுது செத்தவனுக்கு சொர்க்கத்தில் இடம் கொடு!
இனி புலரும் ஆண்டிலாவது உழவுக்கு உயிர் கொடு!!!



மறதி நோய் வருது மட்டுமில்லை வயோதிகம்
மறவா நோய் வருவதும் தான் வயோதிகம்.

தான் பெற்ற பிள்ளை தன்னை
அநாதை இல்லத்தில் விட்டதையும்
தன் மகளுக்கு தான் எப்படி
பாரமாணோம் என்பதையும்
வயதான காலத்திலும் தன்னைக்
காக்கும் பிள்ளைகளையும்
மறவாது நினைத்துக் கொண்டே இருக்கும் நோயது.

ஓடியாட முடியாத அவர்களின் மனதில்
நினைவோட்டம் ஆயிரங்கள்
வயோதிகமும் வரமாய் அமையப்பெற்றால்
அவர்களும் இயற்றுவார்கள் பாசுரங்கள்.
Tricks and Tips