Wednesday, December 31, 2014
















அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்துக்கள்
வாழ்த்துகின்றேன் ஆம் என்னை, உங்களை
நான் வாழ்த்துகின்றேன்.
உழவு என்றொரு வேத வார்த்தையினையே
அழிக்க அரும்பாடுபடுகிறோமல்லவா
அதற்காக வாழ்த்துகின்றேன்!

இன்று நாமிருப்பது நகரமோ கிராமமோ
ஆனால் நான் உண்ணும்
வகைவகையான உணவிலும்,
ஏன் அதன் ஒவ்வொரு பருக்கையிலும்
பின்னால் ஒளிந்திருப்பது ஓர் உழவன்!

உழவன், அவன் நரை தள்ளிய கிழவனென்றாலும்
அவன் பிடித்த கலப்பை போலவே கரமும்
நெஞ்சினில் உரமும் படைத்தவன்.

அவன் வைரம் பாய்ந்த கட்டை,
நாமறிய மாட்டோம் அவன் பட்ட பாட்டை.

நம்மை படைத்தவன் தெய்வமென்றால்
நமக்கு உணவு படைத்தவனை
காவல் தெய்வமாகவாவது வணங்கியிருக்க வேண்டாமா?

ஏனைய தொழிலனைத்தையும்
வியாபாரமாக நோக்குவோர் நடுவிலே
உழவுத் தொழிலினை கடமையென
கட்டுக்குலையாமல் கட்டிகாத்தவன் அல்லவா உழவன்.

உழவினை காக்க அவன் பட்ட பாடு
எழுதினால் பத்தாது ஏடு.

பாட்டன் பூட்டன் காலத்து சொத்தாம்
அவன் கொண்ட காணி நிலம்.
அந்த காணி நிலம் உழுது
அதற்காக அன்னாடமும் அழுது
அன்னாடங்காச்சியாய் உலகினில்
காட்சியளித்தவன்.

விதைநெல்லுக்கு வைத்தான் தாலி அடமானம்
விளைச்சல் பொய்த்தால் போகும் அவன் மானம்.

நாமின்று சுவாசிப்பது உயிர்வளி மட்டுமல்ல
உழவனின் உயிர் வலியும் தான்.
வளி கொடுத்த மரமென்ன  தானாய் வளர்ந்ததா?
இல்லை, அந்த மரமென்ன
நாம் கம்ப்யூட்டரில் விளைவித்ததா?

அன்று நம் பாட்டனொருவன் நிலம் இட்ட
விதைபழுத்து, அதையுண்ட பட்சிகள் இட்ட
எச்சம் தான் இன்று நாம் காணும் விருட்சம்.

உழவளித்தவனின் வழித்தோன்றல்
நாம் உழவழித்தோம்.

நாமிருக்கும் கட்டிடத்தை பெயர்த்துப் பார்த்தால்
அது கூறும் அந்நிலம் உழுதவனின் பெயரினை.

தஞ்சையில் ராஜராஜனுக்குண்டு கல்வெட்டு,
தஞ்சை பெரியகோவிலை கட்டிய தொழிலாளிக்கு
உணவளித்த உழவனுக்கெங்கே கல்வெட்டு.
தொழவேன்டாமா அவன் அடி தொட்டு.
அதுதான் வைக்கிறோமே உழவுக்கே அதிர்வேட்டு.
உறைந்து போன உழவொருனால் நம்
உணவிற்கும் வைக்கும் வேட்டு.

உழவன்! அவனில்லாமல் அவனியில்லை,
அகண்டு பரந்த அகிலமில்லை,
நாம் பசித்து புசிக்க அன்னமில்லை,
அவனிட்டதை உண்ட நமக்கோ அவன் எண்ணமில்லை,
மருந்துக்கும் கூட நாம் உழவு பற்றி எண்ணவில்லை.

குதிரைவாலி செய்தவனுக்கு குதிரை பலமாம்,
வரகு செய்தவன் உடல் கருங்காலி கட்டையாம்,
சாமை உண்டு சாவை வென்றான்,
இரும்புச்சோளம்... உழவோடு இயைந்து
வாழ்ந்ததோர் இரும்புப்பொற்காலம்.

தன் பிள்ளை படிக்க காடு விற்றவன் நினைத்திருப்பான்
இவன் படித்து இழந்ததை மீட்பானென்று, ஆனால்
அவன் சொத்தில் இவன் படித்தான்,
நிலமிழந்தவன்  பலமிழந்தவனாய் அழுது செத்தான்.

விதைநெல்லுக்கும்,
விளைச்சலுக்கும்,
விளைந்தது விற்றிடவும்
அவன் வடித்த கண்ணீர்.
நாம் அறிந்திருந்தால்
அறிந்திருக்க மாட்டோம்
பஞ்சத்தின் வகையில் தண்ணீர்.

இறைவா !!! போனது போகட்டும்
உழுது செத்தவனுக்கு சொர்க்கத்தில் இடம் கொடு!
இனி புலரும் ஆண்டிலாவது உழவுக்கு உயிர் கொடு!!!



மறதி நோய் வருது மட்டுமில்லை வயோதிகம்
மறவா நோய் வருவதும் தான் வயோதிகம்.

தான் பெற்ற பிள்ளை தன்னை
அநாதை இல்லத்தில் விட்டதையும்
தன் மகளுக்கு தான் எப்படி
பாரமாணோம் என்பதையும்
வயதான காலத்திலும் தன்னைக்
காக்கும் பிள்ளைகளையும்
மறவாது நினைத்துக் கொண்டே இருக்கும் நோயது.

ஓடியாட முடியாத அவர்களின் மனதில்
நினைவோட்டம் ஆயிரங்கள்
வயோதிகமும் வரமாய் அமையப்பெற்றால்
அவர்களும் இயற்றுவார்கள் பாசுரங்கள்.


முழுப்பரிட்சை தேதி அறிவித்தவுடன்
ஆரம்பித்துவிடும் பயமும் பதட்டமும்.

ஆனபோதிலும் அதைத்தாண்டி
ஆனந்தம் தருவது, அதுமுடிந்த
விடுமுறை நாட்களில் வரும்
ஊர்த்திருவிழா தான் !!!

காப்புக்கட்டிய நாளிலிருந்தே
மனம் லயிக்கும், மணம் பரப்பும்
அப்படியொரு மகரந்த வாசம்.

அக்னி தகிக்கும் வெய்யில் காந்தலும்,
ஆடித்திங்கள் முழுமைக்குமென
வேயப்பட்ட மூங்கில் கால் பந்தலும்,
தென்னங்குழையும், பந்தலில்
தொங்கும் பலா வகையும்,
சரம் சரமாய் சாத்துக்குடி வகையறாக்களும்,
பந்தலில் பளிச்சிடும் பப்ளிமாஸ் பழங்களும்,
கூந்தப்பனை தோரணமும், தார் தள்ள
வாழை மரம் கட்டிய காரணமும்
ஊர்த்திருவிழா தான் !!!

அல்லிநகரத்து மைக்செட்டும்
காதை கிழிக்கும் ஒலிபெருக்கிகளும்
தனிக் கங்கென தகிக்கும் சீரியல் செட்டுகளும்
கால்பந்து விளையாடும் யானை லைட்செட்டும்
சாலை நடுவே ஓங்கி ஒளிரும் அம்மன் ஆர்ச் சீரியலும்
சுவரெங்கும் பசை காயாத போஸ்டர்களும்
அழகாக மாற்றிவிடும் தெருவையே
ஓர் இரவிலே!

மூங்கில் வெட்ட கும்பக்கரை
பழவேட்டைக்கு சோத்துப்பாறை
மூங்கில் சுமந்துவரும் வண்டி கொடுத்த அலப்பரை
அந்த நாளில் நாங்கள் அறிந்ததில்லை
ஆனந்ததிற்கு வரைமுறை.

வெள்ளனா எழுந்து
வெண்ணீரில் குளித்து
புதுத்துணி அணிந்து, அன்றுண்ட
அம்மா சுட்ட இட்டலியும்,
மல்லிச்சட்டினியும் மனம் மறக்கவில்லை இன்னமும்.

கரகத்தில் ஆடிவரும் அம்மனின் அழகும்
அரிவாள் மேல் ஆடிவரும் கருப்பனின் மிரட்டல் தொனியும்
பயபக்தி (பயத்தினால் வந்த பக்தி) பொழுதுகள்.

சாயங்காலம் சரக்கடித்து
சண்டையில் சட்டை கிழிந்து
சாக்கடையில் பிரண்டெழுந்து, விடிந்ததும்
நெற்றியில் பட்டையும்,
மல்லுவேட்டி சட்டையும்
அணிந்துவரும் சண்டியர்கள்
சிரிப்பூட்டும் இம்சை அரசர்கள்.

மூன்று நாள்கழித்து மறுபூசை
ராகம் ராகமாய் ராட்டினங்கள்
வேடிக்கை பார்க்க மட்டுமென திருவிழா கடைகள்
ஆடியேந்தி வரும் அலங்கரித்த தீச்சட்டிகள்
அரைகுறை ஆடையில் ஆடும் கரகாட்டகாரர்கள்
மதுரை கலைநிலா குழுவினரின் ஆடலும்பாடலும்
அப்பப்பா!!!

ஓர் கனவு வந்து கிளருகிறது
பள்ளிப்பருவத்தோடு புதைந்துபோன
ஊர்திருவிழாவினை.

இப்படியொரு திருவிழாவையே மறந்தொரு ஊரினில்
பத்துமணிக்கு பிறகெழுந்து
நாயர்கடை சாமியானா பந்தலின் கீழ் நின்று
வெந்தும் வேகாத இட்டலியை
தண்ணீர்ச்சட்னியோடு சேர்த்து விழுங்கிக்கொண்டே
அசைபோடுகின்றேன் ஆழ்தூக்கத்துக்
கனவு கொடுத்த அழகிய நினைவுகளை.

Tuesday, December 30, 2014



அணைக்கப்பட்டன விளக்குகள்
எரிகிறது மெழுகு ஒன்று
என்னைப்போலவே உருகியபடி.

வெளிச்சத்தில் திரைமறைவில்
இருந்தவற்றை எல்லாம் இருள்
வெளிச்சம் போட்டு காட்டியது.

இருநிலவினை மறைத்த
இருள்மேகமும் விலகியது.

ஆடைகள் எல்லாம்
அடுத்தவர்முன்தானே என்றேன்.

ஆமோதித்தாள் வெட்கம்
எனும் உடையவிழ்த்து.

உருக உருக ஒளிர்கிறது மெழுகு, உன்னாடை
நழுவ நழுவ மிளிர்கிறது உன் அழகு.

நீ கூறிய வார்த்தைகள் தேன்
ஆதலால் செவிமடுத்தேன்
உனைஎடுத்தேன் , நீ கூறியவை

"நீ தீண்ட நான் சுரப்பேன் அமுதசுரபியாய்
அமுதுண்டு எனை நனைப்பாய் பேரருவியாய்"

சரமாரியாய் பொழிந்த பொழுதிலும்
சந்தோசிக்கிறாய், என் மோக அரக்கி
கொடுப்பாய் உனை உருக்கி.

இதழ் சுளிப்பிலே இன்பமுரைத்தாய்
உதடு கவ்வியே உயிர் குடித்தாய்.

பூவிதழில் மட்டுமா தேன்துளி
செங்காம்புகளும் சொட்டுகின்றதே.

மேடுகளில் ஏறினேன்
சரிவுகளில் சறுக்கினேன்
பள்ளத்தில் புதைந்தேன்.

பாவி புதைகுழி முழுக்க தேன்துளி
இனி எழும்பவா மனம் நினைக்கும்.


பிழையேதும் செய்யாமலே
பிழை செய்தவன் எனப்பட்டேன்.

பழி செய்யவில்லை
பாவம் சுமத்தப்பட்டேன்.

கண்ணீர் துடைக்கவே நினைக்கிறேன்,
இருந்த போதும் கண்ணீரின் காரணமே நானெனப்பட்டேன்.

உறக்கம் தொலைத்தேன்
உயிர் இலந்தவனானேன்.

இத்தனை இருந்தும்
இன்னமும் இருக்கிறேன்.

எனக்கும் கொடுக்கலாம்
அமைதிக்கான நோபல் பரிசினை. 
Tricks and Tips