Wednesday, February 4, 2015


ஒரு விடுமுறை தினம்
எனது கிராமத்து பேருந்து நிலையம்.

துண்டால் தலை பொத்தி
குத்தவைத்து இருமிக்கொண்டே
ஒரு பெரியவர்.

அவரருகினில் அவரின் மனைவி
வந்ததிலிருந்து அவரை
திட்டியபடியே இருக்கிறாள்.

"நீயெல்லாம் இன்னும்
உசுர வச்சுட்டு என்னத்துக்கு
இருக்குர பூமிக்கு பாரமா.

வயசுல குடியும் கூத்தியாளும்னு
கும்மாளம் போட்ட
இப்ப சீக்கு வந்து கஞ்சி
ஊத்தகூட நாதியில்லாம
திரியுற.

பெத்த புள்ள கூட மதிக்கலன்னப்பறமும்
ஒரைக்லையா ஒன் மண்டையில"

இன்னும் பலவாறும் வசை பாடியபடியே.

எனக்கு சரியான கோபம் அவள்மேல்.

பேருந்து வந்தது சற்றே நெரிசலாய்.

அவரை அப்படியே கைத்தாங்கலாய்
பிடித்து பேருந்தில் ஏற்றினால்.

இருக்கையில் இருந்த என்னிடம் வந்து

"யப்பே  ஒடம்பு சொகமில்லாத மனுசனப்பா
கொஞ்சம் ஒக்கார எடம் கொடு சாமி" என்றாள்.

அவரும் வந்தமர்ந்தார்.

அவள் அவரருகினில் கம்பியை
பிடித்த படியே தளர்வாய்
தளர்ந்து நின்றாள்.

என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை
அவளை.

கம்பியில் தலை சாய்த்து
கண்கலங்கி மெல்லிதாக புலம்பினாள்.

"எப்புடி வாழ்ந்த மனுஷன்
அதட்டி சத்தம் போட்டா
ஒருத்தன் பதில் பேச மாட்டன் ஊருல.

இப்ப சீந்த நாதியில்லாம
சீக்கு வந்து கெடக்குராக.

மகமாயி ஒனக்கு கண்ணு குறுடாப் போச்சா
அப்படி இருந்த ஆள இப்புடி
பாக்கவச்சுட்டயே என்ன

ஆத்தா போதும் இந்த சீவனம்
கூட்டிட்டு போயிடு இவுகள
ஒங்கூடவே.

ஆனா...

இவுக உசுரு போகும் நிமிஷம் முன்ன
என் மூச்ச நிறுத்திரு டீ ஆத்தா...
இவுக இல்லாத இடத்துல
எனக்கென்ன வேல"

இறங்கும் இடம் வந்தது
அவரை வெளியில் திட்டிக்கொண்டே
அழைத்துச் சென்றாள்.

அடுத்த விடுமுறை சென்றேன்
பேருந்தினில் காலியாய் இருந்தது
இரண்டு இருக்கை.

ஜன்னல் வெளி தூரத்தில் பார்த்தேன்
மின்னிகொண்டிருந்தது இரண்டு
நட்சத்திரங்கள்.

Monday, January 26, 2015



















அனைவருக்கும் இனிய குடியரசு தின  நல்வாழ்த்துக்கள்

நம்மை மன்னன் ஆண்டான்
மாற்று தேசத்தான் ஆண்டான்
இது நாம் ஆண்டுகொண்டிருக்க
வேண்டிய தருணமிது.

ஆண்டுகள் ஆனது அறுபத்து ஆறு
ஆனாலும் இன்றளவும்
நமை ஆள்வது நாம் தானா.

Sunday, January 25, 2015


என் காது மடல் வருடி
நீ இட்ட முத்தத்திலே
புரிந்து கொண்டேன் உன் மன ஓட்டத்தை
துவங்கிவிட்டாய் நீ உன் ஆட்டத்தை.

காதினில் தொடங்கி
கழுத்தேறி வளைந்து
பிடரி மயிர் கோதி விரல் நுழைத்து
மணிக் கழுத்தினில் ஒன்று
கீழ் இறங்கி மார்பினில் ஒன்று
என நீ கொடுத்த முத்தத்தில்
கிறங்கிப்போனேன்.

என் உடல் மணக்கிறது
உன் எச்சிலின் ஏகாந்த வாசம்.

என்ன வரைகிறாய் என் முதுகினில்.

Saturday, January 24, 2015


என் காதல் கணவா
ஏன் இப்படி?

காதலிக்கும் போது கை பிடிக்க
அனுமதி வேண்டியே அவ்வளவு
கெஞ்சுவாயே இப்போது ஏன் இப்படி.

என் இதழ் தீண்டாதா என நீ
ஏங்கிய நாட்களை நானறிவேன்.

Monday, January 19, 2015














விண்ணவரும் வியந்து போகும் பேரழகு
அசைந்தாடும் நின் தேகமென்னும் தேரழகு.

தரைதொடும் உன் கார் குழலென்ன
கார்முகில் வந்துறங்கும் பள்ளியறையா

நிலவினை வெட்டி ஒட்டி
வைத்ததுதானா உன் நெற்றி

பாண்டிநாட்டு மீனென மிதக்கும் உன் கண்கள்
புலியெனப் பாயவரும் என்னை
சேரன் வில்லெடுத்து கணை தொடுத்து
எனை அடக்குவதென்ன.

Tricks and Tips